முஸ்லிம் சமூதாயத்தில் பிரிவுகளுக்கு காரணமாய் அமைவது எது? பகுதி 01

முஸ்லிம் சமூதாயத்தில் பிரிவுகளுக்கு காரணமாய் அமைவது எது? என்பதில் பொது மக்களிடையே ஏற்படுகின்ற சந்தேகமாக இருக்கிறது. நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கைக்கு பின் ஏற்பட்ட முரண்பாடுகளே இன்று வரை தொடர்கின்றது.
இந்த முரண்பாடுகள் இஸ்லாமிய அறிஞர்களிடத்தில் தெளிவாக இருக்கின்ற போதிலும் சிலர் இவர்களில் யார் சரியானவர்கள் என்பதில் இன்றுவரை தெளிவில்லாதவர்களே இருக்கின்றார்கள்.

உண்மையில் இந்த வரலாற்றில் ஏற்பட்ட துன்ப துயரங்கள் கொடுமைகளையெல்லாம் அறிந்திருந்தாலும் அவைகளை சாதரணமாக ஒரு வரலாற்று பார்வையாக மட்டும் பார்க்கிறார்கள். ஆனால் இன்னும் ஒரு சமூகம் இந்த வரலாற்று கொடூரங்களை எல்லாம் இஸ்லாத்திற்கும் நபிகளாருக்கும் செய்த கொடூமைகளாக படிப்பினையாக பார்க்கிறார்கள். காரணம் இந்த பிரச்சனை ஒரு அரசியல் பிரச்சனையாக மட்டும் பார்க்க முடிவதில்லை

இந்த பிரச்சனை நபிகளாரின் காலத்தில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கிடையில் ஏற்றபட்ட பிரச்சனை. நபிகளாரால் நன்மாரயம் கூறப்பட்ட சமூகத்திற்கு நடந்த பிரச்சனை. எனவே அவர்களில் எதோ ஒரு சமூகத்தினர்தான் சத்தியத்திலும் மற்றுமொரு சமூகம் அசத்தியத்திலும் இருந்திருக்க முடியும். எனவே இதனை அரசியல் பார்வையாக மட்டும் பார்ப்பவர்கள் சுன்னாக்கள். அதனை அரசியல் ஆண்மீக பார்வையோடு பார்ப்பவர்கள் ஷீஆக்கள். ஆனாலும் ஷீஆக்கள் எதனை கொடூரங்கள் என்று சொல்லுகிறார்களோ அதனை சுன்னாக்களும் தமது வரலாற்றில் வைத்து இருக்கிறார்கள். ஆனால் அதை வாழ்க்கையில் கொண்டு வருவதிலும். சமூக கட்டமைப்பை ஒற்றுமையாக உருவாக்குவதிலும் இதனை ஏற்பதில் தயக்கம் காட்டுகிறார்கள். ஆனால் இதனை ஷீஆக்கள் சொல்கின்றபோது ஸஹாபாக்களை தூற்றுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டை வீண்பழி சுமத்தி ஷீஆக்களின் உண்மையான வரலாற்றை படிப்பதிலிருந்து சமூதாய தேடல் நோக்கம் கொண்டவர்களை திசை திருப்புகின்றார்கள். அதன் காரணத்தினால் நாங்கள் இங்கு சரியான வழிகாட்டல் ஒன்றை கையாளுகிறோம். நபிகளாரின் குடும்பத்திற்கு அஹ்லுல்பைத்திற்கு செய்த துன்பங்களை துயரங்களை சுன்னாக்களின் பாதையிலேயே தெளிவு படுத்த நினைக்கின்றோம். இந்த உண்மைகளை அறிந்து அறியாதது போன்று இருக்கின்றார்களே அவர்கள் எழுதிய வரலாறுகளை நாம் இங்கு குறிப்பிட்டு கோடிட்டு காட்டுகிறோம். எது சத்தியம் எது அசத்தியம் என்பதை இஸ்லாமிய உம்மா அறிந்து கொள்ளும் என்ற எதிர்பார்ப்போடு. எனவே நாம் இதில் எந்த கைவிளையாட்டையும் ஏற்படுத்த வில்லை. அவர்களது இணைய தளங்களையும் நாம் இங்கு குறிப்பிடுகின்றோம். http://www.tamilislam.com/
நீங்கள் படித்து தெரிந்து கொள்ள முடியும்.

மேலும் நாம் இந்த வரலாற்றி விடு பட்ட சில நிகழ்வுகளையும் அதன் யதார்த்தத்தையும் எமது எழுத்துகளால் குறிப்பிட்டு தெளிவு படுத்த இருக்கிறோம்.

எனவே அல்லாஹ்வின் கூற்றுப்படி அசத்தியம் அழியும் சத்தியம் எழுந்து கொள்ளும்.

இதுவே தமிழ் இஸ்லாம் என்ற இணையதளத்திலிருந்து பெற்ற கட்டுரை குறிப்பிட்டு காட்டுகிறோம்

நான்காம் கலீஃபா

அலி (ரலி) வாழ்க்கை வரலாறு
_______________________________________

• ஆரம்ப கால வாழ்க்கை
• இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுதல்
• இறைத்தூதர் (ஸல்) நெருக்கம்
• கலந்து கொண்ட போர்கள்
• கலீஃபாவாகத் தேர்ந்தெடுக்கப்படுதல்
• முதல் உரை
• பிரச்னைகளைச் சந்தித்ததல்
• பேச்சுவார்த்தை
• புதிய கவர்னர்களுக்கு இனிமையான வரவேற்பு
• அலி (ரலி) நடவடிக்கை
• ஒட்டகப் போர்
• ஆயிஷா (ரலி) பஷராவைக் கைப்பற்றுதல்
• அலி (ரலி) தோழர்களும்
• கூஃபாவிலிருந்து வந்த உதவி
• பேச்சுவார்த்தை தோல்வி
• கடைசிப் போர்
• சிப்பீன் போர்
• சமாதானம்
• ஒரு மாத காலப் படைஎடுப்பு
• போர்
• நடுவர் தீர்ப்பு
• அலி (ரலி) படையில் பிளவு
• பரிசு
• காரிஜிய்யாக்கள்
• அலி (ரலி) அதிகாரம் பறிபோகுதல்
• எகிப்து தோல்வி
• அமைதியின்மை - குழப்பம்
• ஹிஜாஸ் மற்றும் எமன்
• அலி (ரலி) மரணம்

கவலையோடு.. சில வார்த்தைகள்!

மற்ற கலீஃபாக்களின் வாழ்க்கை வரலாற்றை ஆரம்பிக்கும் பொழுது இல்லாத கவலை, அலி (ரலி) அவர்களது வாழ்க்கையை ஆரம்பிக்கும் பொழுது, கண்ணீர் நீர்ப் பூக்கள் கோர்த்துக் கொண்டன. அன்றைக்கு ஆரம்பித்த உள்வீட்டுப் பிரச்னை இன்று வரைக்கும் தீர்க்கப்படாமலேயே சென்று கொண்டிருப்பதை வரலாறு நெடுகிலும் நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். மேலும், இன்றைக்கு மார்க்க அறிஞர்கள் முதல் சாதாரண முஸ்லிம் வரைக்கும், அலீ (ரலி) வாழ்ந்த காலப் பகுதியில் வாழ்ந்தவர்களில் யார் மீது தவறு இருக்கின்றது, தவறிழைத்தவர்கள் யார்? என்பதில் குழப்பம் நீடித்துக் கொண்டு தான் இருக்கின்றது. எனவே, அலி (ரலி) அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை உங்களுக்கு நாம் வழங்கும் பொழுது, அதில் தவறுகளைக் காண்பீர்கள் என்று சொன்னால் அது நாம் எடுத்துக் கொண்ட மொழியாக்கத்தினைச் சார்ந்து தான், நாம் மொழிபெயர்த்து வழங்குகின்றோமே ஒழிய யார் மீதும் தவறு கண்டு பிடிக்கும் நோக்கத்துடன் இந்த மொழியாக்கத்தைச் செய்யவில்லை என்பதை மனதில் கொண்டு, விவாதங்களுக்கு வழி வகுக்காமல் வரலாற்றை மட்டும் பார்த்து, படிப்பினை பெற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்.

ஆரம்பகால வாழ்க்கை

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தூதுத்துவப் பணியை முதன் முதலில் தனது இரத்த சொந்தங்களில் இருந்து ஆரம்பித்த பொழுது, அவர்களது குடும்பத்தவர்களில் அப்பொழுது அலீ (ரலி) அவர்களுக்கு வயது பத்து தான் ஆகியிருந்தது. அப்பொழுதே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதோடு, 'நான் எப்பொழுதும் உங்களுக்கு மிக நெருக்கமாகவே இருப்பேன். "யாரசூலுல்லாஹ்..! என்று வாக்குறுதி அளித்தார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு 30 வயது இளமைமையானவர். இவருடைய தந்தை அபூதாலிப், தாயார் ஃபாத்திமா ஆவார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்பே தந்தையாரை இழந்தார்கள். தந்தை இறந்ததன் பின்பு பாட்டார் அப்துல் முத்தலிப் அவர்களின் அரவணைப்பிலும், அடுத்ததாக தாயார் அமீனா அவர்களும் மரணமடைந்ததன் பின்பு, அலீ (ரலி) அவர்களின் தந்தையாரும், தனது சிறிய தந்தையுமான அபூதாலிப் அவர்களின் அரவணைப்பிலும் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வளர்ந்தார்கள்.

அபூதாலிப் அவர்களின் குடும்பம் மிகப் பெரியது. என்றாலும் அவர்களது குடும்பம் வசதியானது தான். அலீ (ரலி) அவர்கள் பிறந்த பொழுது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நல்ல வாலிப் பருவத்தில் இருந்தார்கள். அப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு மனைவியும், குழந்தைகளும் இருந்தார்கள். எனவே, அப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களை தன்னுடன் வைத்துப் பராமரித்துக் கொண்டார்கள். இந்த நிலையில், அலீ (ரலி) அவர்கள் மிகவும் உன்னதமான குடும்பப் பராமரிப்பின் கீழ், எந்த வீடும் அளிக்கவியலாத பண்புப் பாசறையின் கீழ் அவர்களது இளமைக் கால வாழ்வு ஆரம்பமானது.

தனது இளமைக் காலத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மூலம் பெற்றுக் கொண்ட பயிற்சிகள், அவரது இறுதிக் காலம் வரைக்கும் நீடித்தன. மிகவும் கூர்மையான அறிவும், தொலைநோக்குச் சிந்தனையையும், சத்தியத்தை விரும்புகின்ற நெஞ்சத்தையும் அவை தந்து கொண்டிருந்தன. அனைத்திலும், அவரை எதற்கும் அஞ்சாத மாவீரராகவும், அல்லாஹ்வின் பாதையில் தன்னை அற்பணிக்கக் கூடியவராகவும் அவரை பரிணமிக்கச் செய்தது. இத்தகைய அரும் பெருங்குணங்கள் இஸ்லாமிய வரலாற்றில் மிகவும் அரிதாகக் காணக் கிடைக்கும் வரலாற்றுப் பொக்கிஷங்களாகும்.

2. இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுதல்
இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பயிற்சிப் பாசறையில் இளமைக் கால வாழ்வை ஆரம்பித்த அலீ (ரலி) அவர்களுக்கு அப்பொழுது ஒன்பது வயதே ஆகியிருந்தது. அப்பொழுது தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தூதுத்துப் பணியை ஆரம்பம் செய்திருந்த கால கட்டம். ஒருநாள் அலீ (ரலி) அவர்கள் வீட்டில் இருந்த பொழுது, இறைத்தூதர் (ஸல்) அவர்களும், அவர்களது துணைவியாரும் தரையில் தலையை வைத்து, சுஜுது நிலையில் இருப்பதைக் காண்கின்றார்கள். அவர்கள் அப்பொழுது அல்லாஹ்வைப் புகழ்ந்த வண்ணமும் இருந்தார்கள். இந்த அதிசய நிகழ்ச்சியை இமை மூடாமல் பார்த்துக் கொண்டிருந்த அலீ (ரலி) அவர்கள், இதுபோன்றதொரு நிகழ்வை நாம் எங்கும் எப்பொழுதும் கண்டதில்லையே, என்ற சிந்தனையில் ஆழ்ந்தார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்த பின், அவர்களை அணுகிய அலீ (ரலி) அவர்கள், சற்று முன் நான் பார்த்த காட்சிக்கு என்ன அர்த்தம் என்று வினவினார்கள்.

நாங்கள், நம்மைப் படைத்த வல்லோனாகிய, ஏகனாகிய அல்லாஹ்வைத் தொழுது கொண்டிருந்தோம் என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பதிலிறுத்து விட்டு ...,

நான் உங்களுக்கு ஒரு அறிவுரை ஒன்றைக் கூறுகின்றேன். நீங்கள் எப்பொழுதும் அந்த லாத், உஸ்ஸா, அல்லது வேறு எந்த சிலைகளுக்கு சிர வணக்கம் செய்யாதீர்கள், சற்று நீங்கள் பார்த்தீர்களே..! அதைப் போல உங்களைப் படைத்த ஏகனுக்கு மட்டும் சிர வணக்கம் செய்யுங்கள் என்று கூறினார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள்.

நான் இதுபோல எப்பொழுதும் கேள்விப்பட்டதில்லையே,! இது அலீ (ரலி) அவர்கள். நான் எனது தந்தையிடம் முதலில் இது பற்றிக் கலந்து விட்டு வந்து உங்களுக்குப் பதில் சொல்கின்றேன் என்று கூறினார்கள் அலீ (ரலி) அவர்கள்.

அலீயே..! நீங்கள் இங்கு பார்த்ததை யாரிடமும் இப்போதைக்குக் கூற வேண்டாம். நீங்களாகவே சிந்தியுங்கள், அதனை உங்களது மனதிலேயே வைத்துக் கொள்ளுங்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அறிவுரை கூறினார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இந்த அறிவுரை அவருக்கு நல்லதாகவே பட்டது. எனவே, அதுபற்றிச் சிந்திக்கலானார்கள். சிந்தனைத் தெளிவுக்குப் பின்னர், இறைத்தூதர் (ஸல்) அவர்களுயை கருத்தினை ஏற்றுக் கொண்டார்கள். அடுத்த நாள் காலை இஸ்லாத்தினைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார்கள். இளைஞர்களிலேயே அலீ (ரலி) அவர்கள் தான் முதன் முதலில் இஸ்லாத்தினைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட வரலாற்றுப் பெருமை கொண்டவர்கள். இந்த வயதில் இவ்வளவு சுதந்திரமாக சிந்தித்து, ஒரு கொள்கையை ஏற்றுக் கொள்வது என்பது மிகவும் அரிதானதொன்று..! அதனைக் காட்டிலும் தனது கண் முன் தனது சமுதாயம் ஒரு பாதையில் போய்க் கொண்டிருக்கும் பொழுது, சத்தியத்தைத் தேடி தனது சிந்தனைக் கதவுகளைத் திறந்து வைப்பதென்பது நினைத்தும் கூட பார்க்கவியலாத வயது அது..! ஆனாலும் சத்தியத்தை அவர்கள் எவ்வளவு விரும்பினார்கள், அதன் மீது எந்தளவு காதல் கொண்டிருந்தார்கள் என்பதைத் தான் அவர்களது சிந்தனைத் தெளிவு நமக்கு எடுத்துக்காட்டாக அமைகின்றது.

கருத்துகள் இல்லை: